Sunday, April 26, 2009

541. ஈழப்பிரச்சினையும் இந்தியத் தேர்தலும்

பெரிய அலசல் எதுவும் கிடையாது. சில எண்ணங்கள்:

1. ஈழத்தமிழர் பிரச்சினையை இந்தியாவில் உள்ள பிற மாநிலத்தவருக்கு சரியாக எடுத்துச் செல்லவில்லை என்ற கருத்துக்கு: எடுத்துச் சென்றிருந்தாலும் பெரிய அளவில் பலன் இருந்திருக்காது என்பது தான் யதார்த்தம். இதற்கு பிற மாநிலத்தவர் தமிழர்களை வெறுக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. இந்தியத்தமிழர்கள் பிற நாடுகளில் மாட்டிக்கொண்டு அல்லல்படுவதற்கே, தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்களில் கவனம் ஈர்க்கப்படாத நிலையில், வேற்று நாட்டவரான ஈழத்தமிழருக்கு அவர்களிடம் எந்த விதமான அக்கறையை எதிர்பார்க்க முடியும் ?

2. மேற்கூறியதற்கு, இந்திய ஆங்கில மீடியாவின் பொறுப்பற்றத்தனமும் ஒரு முக்கியக் காரணம். ஈழத்தமிழர் படும் இன்னல்கள், அங்கு ஏற்படும் பெரும் உயிரிழப்பு குறித்து எதுவும் பேசாமல், இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளிடமிருந்து இந்த இடத்தைக் கைப்பற்றியது / அந்த இடத்தை கைப்பற்றியது என்று கிரிக்கெட் மேட்ச் வர்ணனையைத் தான் நெடுங்காலமாக செய்து வருகிறது :-( அங்கு நிலவும் மனித அவலம் குறித்த கண்ணோட்டம் இந்திய மீடியாவில் செய்திகளாகவோ, விவாதங்களாகவோ வரவில்லை!

3. எந்த தமிழக அரசியல் கட்சியும், உருப்படியாக ஈழத்தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பது ஒரு புறமிருக்க, மத்தியில் இருக்கும் காங்கிரஸ் அரசு, இப்பிரச்சினையில் பெரும் நாடகம் ஆடியிருக்கிறது என்பதில் பெரும்பான்மையான தமிழர்களுக்கு உடன்பாடு இருக்கிறது. அதனால், காங்கிரஸ்-திமுக கூட்டணி இத்தேர்தலில் பெரும் தோல்வியைத் தழுவும் / தழுவ வேண்டும்.

அந்த ஒரு காரணத்திற்காக, அதாவது வாக்குகள் சிதறாமல் இருக்க தனித்துப் போட்டியிடும் எந்தக் கட்சிக்கும் (பிஜேபி, தேமுதிக..) அல்லது சுயேச்சைகளுக்கும் (சரத்பாபுவும் சேர்த்து) இம்முறை வாக்களிக்காமல் இருப்பது நல்ல யுக்தியாக அமைய வாய்ப்புள்ளது. "தனி ஈழம் தான் தீர்வு" என்று தற்போது ஜெ முழங்குவது ஆச்சரியத்தை (ஏன் அதிர்ச்சியையும்!) தந்தாலும், அதிமுக கூட்டணிக்கே ஆதரவு அளிக்க வேண்டிய நிலைமை இருப்பதாகவே தோன்றுகிறது! மத்தியில் அரசு மாறினால், ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது நல்லது நடக்கும் என்று நம்பித் தான் ஆக வேண்டும்!

4. இந்தியாவின் அறிவுஜீவி செக்யூலரிஸ்ட்களும், லிபரல்களும் வெகு தூரத்தில் நடக்கும் பாலஸ்தீனிய, இராக் பிரச்சினைகளுக்கு இங்கு ஓங்கி குரலெழுப்பி பெரிய அளவில் கலாட்டா செய்வார்கள். மீடியாவும் அவர்களுக்கு நல்ல விளம்பரம் அளிக்கும் ! இஸ்ரேல் தாக்குதலில் சிவிலியன்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் (நியாயமானது தான்!) தெரிவிக்கும் இவர்கள், நம் அண்டையில் நடக்கும் (இலங்கை ராணுவத் தாக்குதலால் ஏற்படும்) அநியாயப் படுகொலை (இன ஒழிப்பு!) பற்றி வாய் திறக்க மாட்டார்கள் :-( ஹெஸ்பொல்லா ஒரு தீவிரவாத இயக்கம் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!!!

5. விடுதலைப் புலிகள் அப்பாவித் தமிழர்களை கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்று கூறுபவர்களுக்கு: சரி, போரின் இறுதிக் கட்டத்தில் அப்படி நடக்கிறது என்பதை ஓரளவு ஒப்புக் கொள்ளலாம்.

ஆனால், கடந்த ஒரு வருடமாக, போர் என்ற பெயரில், இலங்கை ராணுவம் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்ததற்கு (state terrorism) உலக நாடுகள் தரப்பிலிருந்து முனகலான கண்டனம் தான் கேட்டுக் கொண்டிருந்தது! (அதுவும், சீனாவும், பாகிஸ்தானும், இது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை என்று உளறி வருகின்றன!)

இப்போது தான், உலகெங்கும் தமிழர்களின் ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் சற்று உரக்க குரல் கொடுத்துள்ளன! ஆனால், ராஜபக்ஷே யார் பேச்சையும் இந்த நிமிடம் வரை கேட்கவில்லை என்பது நாம் அறிந்தது தான்...

எ.அ.பாலா

டெயில்பீஸ்: போர் நிறுத்தத்திற்கான மற்றும் பேச்சு வார்த்தைக்கான அமெரிக்க வேண்டுகோளை நிராகரித்து, நேற்று கோத்தபயா ராஜபக்ஷே "எங்களுக்கு எது சரி என்று எடுத்துச் சொல்ல நீங்கள் யார்?" என்று மிகவும் ஆணவமாக பேசியிருப்பது (இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி) குறிப்பிடத்தக்கது.

"The US state department should be ashamed of their request. If anybody tells me that, I will tell them to mind their own business. This is completely an internal issue..... We will not allow anyone to interfere"

இனிமேல் பேசி, வேண்டுகோள் விடுத்து, இலங்கைக்கு யாரும் எதையும் புரிய வைக்க முடியாது என்பது தெளிவு! மற்றவர்களை அண்டிப் பிழைக்கும் நிலையில் இருக்கும் ஒரு சுண்டைக்காய் நாட்டுக்கு இத்தனை திமிர் இருப்பதற்கு சீனக் கம்யூனிஸ்ட்களும் ஒரு முக்கியக் காரணம்.

அப்படியே கீழுள்ள வாக்குப்பெட்டியில் தயவு செய்து வாக்களித்து விட்டுச் செல்லவும்:


ஜெயலலிதாவின் தனி ஈழ ஆதரவு
ஆத்மார்த்தமான திடமான முடிவு
தேர்தல் ஸ்டண்ட்
பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்







Monday, April 20, 2009

540. ஒரு விபத்து ஒரு மரணம் ஒரு பேரிழப்பு

இது குறித்து எழுத வேண்டுமா என்று பலமுறை யோசித்துத் தான், இதை எழுதுகிறேன்! காரணம் உள்ளது. பின்னால் சொல்கிறேன்.

"சென்னை ஏப்ரல் 17: நேற்று இரவு 11 மணியளவில் தி.நகரில்,ஒரு சாலை விபத்தில், ஐடி கம்பெனி ஒன்றில் பணி புரிந்து வந்த 27 வயது வாலிபர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்" -- இது போல தினம் 4 அல்லது 5 மரணச்செய்திகளை நாளிதழ்களில் வாசிக்கிறோம். செய்திகளை கடந்து விடுகிறோம், மறந்து விடுகிறோம். வாழ்க்கையின் ஓட்டம் அப்படியானது..

ஆனால், மேற்கூறிய செய்திக்கும் எனக்கும் சம்பந்தம் உள்ளது. (அந்த துக்கச்செய்தி என்னைத் தான் முதலில் வந்தடைந்தது. அடுத்த 15 நிமிடங்கள் தான் நான் வாழ்வில் அனுபவித்த மிக மிக மோசமான தருணங்கள்!) அந்த விபத்தில் இறந்த வாலிபர், 27 வயதான என் மருமகன் (அக்கா மகன்); தி.நகரில் கட்டப்பட்டுள்ள புதுப் பாலத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலைப் பக்கம் (பைக்கில் பயணித்து) இறங்கும்போது, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த தற்காலிக மீடியனைத் தட்டி, வண்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டு, பின்னந்தலையில் அடிபட்டு, ஸ்பாட்டிலேயே இறந்து போனான்.

எனக்குப் பிறந்தது இரண்டுமே பெண்கள் என்பதால், நானும் என் மனைவியும் அவனை மகன் போலவே பாவித்தோம். அவனும் மகன் போல் தான் நடந்து கொண்டான். மிக நல்லவன். சூதுவாது அறியாதவன், அதிர்ந்து பேசமாட்டான். கடும் உழைப்பாளி.

"எதற்குப் பிறந்தான்? எதற்குப் படித்தான்? ஏன் இத்தனை நல்லவனாக இருந்தான்? எதற்கு பிரதிபலன் எதிர்பாராமல் எல்லார்க்கும் ஓடியோடி உதவி செய்தான்? அவனைக் காப்பாற்ற ஒரு வாய்ப்பு எங்களுக்கு வழங்காமல் (முக்கியமாக அவனிடம் சதாசர்வ காலமும் உதவி பெற்றுக் கொண்ட எனக்கு, அவனுக்கு உதவ ஒரு வாய்ப்பு தராமலேயே!) ஒரு கணத்தில் உயிரை விட்டு, எதற்காக ரோடு ஓரத்தில் ஒரு முக்கால் மணி நேரம் அனாதையாகக் கிடந்தான்?" - இப்படி எத்தனையோ மனதை அரிக்கும் கேள்விகள், எதற்கும் பதில் கிடையாது :-(

சிறு வயதிலிருந்தே, பல பொழுதுகளை எங்கள் வீட்டில் கழித்தவன் அவன். "ஆனந்தா இதைப் பண்ணு, ஆனந்தா அதைப் பண்ணு, ஆனந்தா அதை வாங்கிட்டு வந்தியா, ஆனந்தா அதைக் கொடுத்தாச்சா" என்று இனிமேல் ஆனந்தநாம சங்கீர்த்தனம் பண்ண முடியாது! அவன் செத்துப் போனது என் ஸிஸ்டத்தில் இன்னும் சரியாக பதிவாகவில்லை. "மாமா" என்று கூப்பிட்டவாறே, எப்போதும் போல் ஒரு சனிக்கிழமை மதியம் ஆபிசிலிருந்து என் முன் வந்து நிற்பான் என்ற பிரமை என்னை சூழ்ந்திருக்கிறது!

அகாலத்தில் ஒருவர் இறப்பது என்பது அவருக்கான தண்டனையே அல்ல. அந்த தண்டனை அவரைச் சார்ந்தவர்களுக்கானது. எண்ணி எண்ணி மருகும்படியான துக்கம் அது, சில சோகங்கள் வாழ்வின் எல்லை வரை நம்மை விடாது துரத்தும் :-( நிச்சயம் அது போன்ற ஒன்று தான் இது, என்னளவில். இப்படிச் சொல்ல காரணம் இருக்கிறது. ஆனந்த் எனக்காகச் செய்த காரியங்கள் எல்லாவற்றையும் என்னாலேயே செய்து விட முடியும் என்றாலும், அந்தச் செயல்களை நானே செய்யும் சமயங்களில், அவன் ஞாபகம் வருவதை இனி தவிர்க்கவே முடியாது...

2 வருடங்களே பணி புரிந்த கம்பெனியிலிருந்து இறுதி மரியாதை செலுத்த 500 பேர் வந்திருந்தது பார்த்து பெருஞ்சோகத்திலும், பிரமிப்பு ஏற்பட்டது. இன்னும் எத்தனையோ நண்பர்கள் சாவுக்கு...

மிக நல்லவனாக இருந்தால், கடவுள் சீக்கிரம் அழைத்துக் கொண்டு விடுவான் போல் இருக்கிறது! என் வலது கை போல் இருந்தவன், பெருமாள் அந்தக் கையை உடைத்துப் போட்டு விட்டார்!

இந்தப் பதிவுக்கான காரணம்: ஆனந்த் விபத்து நிகழ்ந்தபோது, ஹெல்மட் அணிந்திருந்தான். ஆனால், ஹெல்மட் ஸ்ட்ராப்பின் (strap) பக்கிளை (buckle) போடாததால், ஹெல்மட் கழண்டு விட்டதாக விபத்தை நேரில் பார்த்த ஒரு கடைக்காரர் கூறினார்.

ஆகவே, பைக்கில் செல்பவர் ஹெல்மட் போட்டால் மட்டும் போதாது. ஹெல்மட் strap buckle ஐயும் சரியாக போட்டுக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். இவ்விடுகையை வாசிக்கும் (டூ வீலரில் பயணிக்கும்) நண்பர்களுக்கு இதை ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்.

நேற்று அயன் திரைப்படம் பார்க்க எனக்கும் சேர்த்து டிக்கெட் புக் பண்ணியிருந்தான்! இனி அயன் படம் எப்போதும் பார்க்க முடியாது செய்து விட்டான் :-(

Thursday, April 16, 2009

539. பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோத்சவம்-யானை வாகனம்

எம்பிரான் எந்தை என்னுடைச்சுற்றம்* எனக்கரசு என்னுடைவாணாள்* அம்பினால் அரக்கர் வெருக்கொளநெருக்கி* அவருயிர்செகுத்த எம்அண்ணல்*

என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்ற திருமால் திருவல்லிக்கேணியில் புதன் இரவு (15 ஏப் 2009) "கஜம்" மீது ஏறி "ஜம்" என்று வீதி உலா வந்தார்.

படங்களை சொடுக்கி பெரிதாக்கிப் பார்க்கவும்.


திருவல்லிக்கேணி திவ்யதேசம் பற்றி 2 திருமங்கையார் பாசுரங்கள் கீழே:

விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் * வேழமும் பாகனும் வீழ*
செற்றவன் தன்னை புரமெரி செய்த* சிவனுறு துயர்களை தேவை*
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு* பார்த்தன் தன் தேர்முன் நின்றானை*
சிற்றவை பணியால் முடி துறந்தானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே*



ஒரு நான்கடிகள் கொண்ட பாசுரத்தில் எத்தனைத் தகவல்கள் தருகிறார், பாருங்கள்:

விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் -
வில் விளையாட்டின் போது, தன்னை அழிக்க கம்சன் நடத்திய யாகத்தையும், கம்சனையும், மலையை ஒத்த பலம் வாய்ந்த அவனது மல்யுத்த வீரர்களையும்

வேழமும் பாகனும் வீழ* செற்றவன் தன்னை -
கம்சனினின் அரண்மனையின் வாயிலில், கண்ணனை மிதித்தழிக்கக் காத்திருந்த குவலயாபீடம் என்ற பெருயானையையும் அதன் பாகனையும் வீழ்த்தி அழித்த கண்ணபிரானும்

புரமெரி செய்த* சிவனுறு துயர்களை தேவை* பற்றலர் -
திரிபுர அசுரர்களை தனது புன்னகையால் வீழ்த்திய சிவபெருமான், ஒரு சமயம், கோபத்தில் பிரம்மனின் ஐந்தாவது தலையை கிள்ளி எடுக்க, அத்தலையின் ஓடு சிவனின் உள்ளங்கையில் ஒட்டிக் கொண்டதால், (திருமகளை அவ்வோட்டில் பிட்சை அளிக்க வைத்து) சிவன் அடைந்த துயரங்களிலிருந்து விமோசனம் அளித்த (திருக்கரம்பனூர்) உத்தமனும்

வீயக் கோல் கையில் கொண்டு* பார்த்தன் தன் தேர்முன் நின்றானை -
மகாபாரத யுத்தத்தில் பாண்டவர் பக்கம் இருந்து, தன் திருக்கையில் சாட்டை ஏந்தி, அர்ஜுனனுக்கு தேரோட்டியாக களத்தில் முன் நின்று, தன் மார்பிலும் முகத்திலும் பகைவரின் அம்புகளை ஏற்று அர்ஜுனனைக் காத்த ஸ்ரீகிருஷ்ணனும்

சிற்றவை பணியால் முடி துறந்தானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* -
சிற்றன்னை கைகேயி இட்ட கட்டளைக்குப் பணிந்து, ராஜ்ஜியத்தையும், மணிமுடியையும் விருப்பத்துடன் துறந்த ஸ்ரீராமனும் ஆன ஒப்பில்லா எம்பெருமானை திருவல்லிக்கேணியில் நான் கண்டேனே !

மீனமர் பொய்கைநாள் மலர் கொய்வான்* வேட்கையினோடு சென்றிழிந்த*
கானமர் வேழம் கையெடுத்தலறக்* கரா அதன் காலினைக் கதுவ*
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து* சென்று நின்று ஆழி தொட்டானை,
தேனமர் சோலை மாட மாமயிலைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே*


பெருமாளின் மலர்ச்சேவைக்கு வேண்டி, மீன்கள் துள்ளி விளையாடும் தடாகத்திலிருந்து தினம் தாமரை மலர்களை பறித்து வந்த, காட்டில் உற்சாகமாக சுற்றித் திரியும், கஜேந்திரன் என்ற யானையின் காலை, ஒரு சமயம் முதலையொன்று கவ்வ, கஜேந்திரன் தன் தும்பிக்கையை உயர்த்தி, "ஆதிமூலமே" என்று பெருங்குரலெடுத்து அலற, விரைந்தோடி வந்த எம்பெருமான், தன் சக்ராயுதத்தை வீசி முதலையை அழித்து, யானையை துயரிலிருந்துக் காத்தான்.

அடியவர் துயர் தீர்க்கும் அப்பேர்ப்பட்ட வரதப்பெருமானை, தேன் மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலைகள் சூழ்ந்த, மாடங்கள் மிகு மாமயிலைக்கு அருகில் உள்ள, திருவல்லிக்கேணியில் நான் கண்டேனே !

குறிப்பு: 'ஆழி தொட்டானை' என்பதற்கு 'யானைக்கு பாதிப்பு இல்லா வண்ணம், முதலை மட்டும் அழியும்படியாக திருச்சக்கரத்தை வீசிய எம்பெருமான்' என்று பொருள் கொள்க !!!

சிறுவர்கள் எழுந்தருளப் பண்ணிய குட்டி யானை வாகனம், எவ்வளவு நேர்த்தியாக வடிவமைத்து அலங்கரித்திருக்கிறார்கள், பாருங்கள்.

பாசுரச் சிறப்பு: முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சாரியார், தனது உபன்யாசத்தின் போது கஜேந்திரனைக் காக்க பெருமாள் கொண்ட அவசரத்தை சுவைபடக் கூறுவார் ! 'ஆதிமூலமே' என்ற அலறலைக் கேட்ட மாத்திரத்தில், வைகுண்டத்தில் பிராட்டியுடன் அளவளாவிக் கொண்டிருந்த பெருமாள் அவசர அவசரமாகக் கிளம்ப யத்தனித்தபோது, அவரது உத்தரீயம் (மேல் துணி) பிராட்டியின் கையில் சிக்கிக் கொள்ள, பெருமாளின் எண்ணம் புரிந்த கருடன் அவரை விட வேகமாக பறந்து வந்து (பெருமாள் கருடன் மேல் ஏறி பயணம் மேற்கொள்ள வேண்டி) அவர் முன் நிற்க, சக்ராயுதமானது, பெருமாள் கருடன் மேலேறி பயணத்தைத் தொடங்கி விட்டபடியால், தானாகவே பறந்து வந்து அவரது வலது திருக்கரத்தில் சரியாக அமர்ந்து கொள்ள, பகவான் அதிவிரைவில் சென்று, கஜேந்திரனுக்கு அபயம் அளித்ததாக, முக்கூரார் அழகாக பாசுர விளக்கம் கூறுவார் !

தன்னை வேண்டி அழைத்த அடியவரைக் காக்க விரைந்த பெருமாளுக்கு, கருடனின் உதவியோ, சக்கரத்தின் தேவையோ தோன்றவே இல்லை ! அபயம் அளிப்பது ஒன்றே குறி ! அப்பேர்ப்பட்ட கருணாமூர்த்தி எம்பெருமான் ஆவான் ! கீழே விழுந்து அடிபட்டு அழும் குழந்தையை, கையில் ஏந்தி ஆசுவாசப்படுத்தி ஆறுதல் சொல்ல எப்படி ஒரு தந்தை அவசரமாக ஓடி வருவானோ, அது போலவே, எம்பெருமான் ஓடோடி வந்து, தன் அடியாரின் துயர் தீர்த்து அபயம் அளிப்பான்.

Tuesday, April 07, 2009

538. ஷூ எறியும் கலாச்சாரம்!

எதிர்ப்பைத் தெரிவிக்க சமீபத்தில் மிகவும் பிரபலமான வழியாக இது கருதப்படுகிறது! பொதுவாக, நாம் கடுங்கோபத்தில் இருக்கும்போது, எதிராளியைப் பார்த்து "செருப்பால் அடிப்பேன்" என்று கூறுவது சகஜம் தான் என்றாலும், செருப்பை முன் வைத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கை (காலில் போட்டுக் கொண்டு நடை பயில்வதை விடுத்து!) எதிராளிக்கு அவமானம் தரும் ஒன்றாகவே கருதப்படுகிறது. அதனால் தான், பெரியார் பக்தர்கள், கடவுளர்களுக்கு செருப்பு மாலை அணிவித்து, நாத்திகத்தை பரப்ப (அல்லது மூட நம்பிக்கைகளை ஒழிக்க - இப்படிக் கூறவில்லை என்றால், பெரியார் வாரிசுகள் என்னை கும்மி விடுவார்கள் :)) முயற்சித்தார்கள்! அதனால், ஆத்திகமும், ஆன்மீகமும் வேக வேகமாக வளர்ந்தன என்பது இந்த தலைப்புக்குச் சம்பந்தமில்லாத ஒன்று!

அது போல, பிடிக்காத ஒருவரின் (எ.கா:ஹிட்லர் ராஜபக்ஷே!) உருவ பொம்மையை எரிப்பதற்கு முன்னால், அதற்கு செருப்பு மாலை அணிவித்து அழகு பார்ப்பதும் நாம் அனுசரிக்கும் ஒன்று தான்! எப்படி கற்களை குறி பார்த்து வீசுவதில் வழக்கறிஞர்கள் திறமைசாலிகளாக விளங்குகிறார்களோ, இந்த செருப்பு வீசுவதில், பத்திரிகையாளர்களும், மாணவர்களும் முன்னணியில் இருக்கிறார்கள். அதனால், குறி பார்த்து செருப்பு வீசுவதில் நல்ல திறமை பெற விரும்புபவர்கள் இவர்களை நாடி பயிற்சி பெறுவது அவசியமாகிறது. மீடியாவைத் தாக்கி எழுதும் புண்ணியவான்கள் (என்னையும் சேர்த்து) சற்று உஷாராக இருப்பது, அவர்கள் உடம்புக்கு நல்லது!

செருப்பு வீசுவதன் வாயிலாக, வீசுபவருக்கு 15 நிமிடப் புகழ் உடனடியாக கிடைத்து விடுகிறது என்றாலும், சில சமயங்களில் "தர்ம அடி" கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அது போல, ஒற்றைச் செருப்போடு காவலர்களால் தரதரவென இழுத்துச் செல்லப்படும் அசௌகரியத்தையும் அவமானத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மிச்சமிருக்கும் ஒத்தைச் செருப்பை பயன்படுத்தவும் இயலாது!

அதனால் தான், இராக்கில் ஜார்ஜ் புஷ் மீது செருப்பெறிந்த இராக்கிய பத்திரிகையாளர், தனது 2 ஷூக்களையும் சமயோஜிதமாக கழற்றி வைத்திருந்து, அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக புஷ் மீது வேகமாக எறிந்து தன் எதிர்ப்பைத் தெரிவித்தார். இப்படிச் செய்வதன் மூலம், செருப்பு எதிராளியைத் தாக்கும் probability இரண்டு மடங்காகிறது. அந்த "இரட்டை ஷூ" தாக்குதலிலிருந்து மிக லாவகமாக தப்பித்த ஜார்ஜ் புஷ், அமெரிக்கர்கள் ஏன் தடகள விளையாட்டில் உலகில் தலை சிறந்தவர்களாக விளங்குகிறார்கள் என்ற விசயத்தை நமக்குப் புரிய வைத்தார்! புஷ்ஷின் பாதுகாவலர்களே, அவரது லாவகத்தைக் கண்டு அசந்து போய் விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! புஷ் மீது செருப்பு வீசப்பட்ட அந்த கண்கொள்ளா காட்சியை இங்கு பார்க்கலாம்.


புஷ் இடத்தில், மன்மோகன் சிங்கோ வாஜ்பாயோ இருந்திருந்தால் மேட்டர் விபரீதமாகக் கூட போயிருக்கக் கூடும். அதனால், வயதில் சிறியவர் தான் பிரதமராகவோ, அதிபராகவோ இருக்க வேண்டும் என்று கூறவில்லை. Alert-ஆக இருத்தல் வேண்டும். எண்பது வயதைத் தாண்டி விட்டாலும், அத்வானிஜி அலர்ட்டாகத் தான் இருக்கிறார் என்பது என் கருத்து. (இந்துத்துவா முத்திரை குத்த நினைப்பவர்களுக்கு, இது சரியான வாய்ப்பு:) )

சக பதிவர்களை அவமானப்படுத்த நினைக்கும் "முற்போக்கு" அறிவுஜீவிப் பதிவர்கள், "இத்தகைய 'அழுகிய' மனப்பான்மை கொண்டவரை மலம் தோய்ந்த செருப்பால் அடிக்க வேண்டும்" என்று ஆரோக்கியமாக எழுதும் பழக்கம், தமிழ் இணையத்தில் தொன்றுதொட்டு இருந்து வருகிறது! செருப்பு போட்டு நடக்கும்போது, மலத்தை மிதித்து விட்டாலே, அருவருப்பாக உணரும் நாம், செருப்பை "அதில்" தோய்த்து அடிக்கப்படுவதாக எண்ணும்போது, எப்படி உணர்வோம்? அதாவது, செருப்புடன் மலம் கலக்கும்போது, அவமானத்தின் வீரியம் அதிகமாகிறது! அது போல "நல்ல பீயள்ளிய விளக்கமாறால் அடிக்க வேண்டும்" என்றும் எழுதும் வழக்கமும் தமிழ் வலையுலகில் விரவி இருந்தது! இப்போதே துர்நாற்றம் அதிகமாக வீசுவதால், இந்த மேட்டரைத் தொடர விருப்பமில்லை :)

செருப்பு அதிகம் புழங்காத காலத்தில், 'நீ என் கால் தூசுக்குப் பெற மாட்டே' என்ற உபயோகம் பரவலாகக் காணப்பட்டது!

புஷ்ஷுக்கு அடுத்தபடியாக, சமீபத்தில், இங்கிலாந்து சென்ற சீனப்பிரதமருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் செருப்பு "மரியாதை" செய்யப்பட்டது, "க்யான் சூன் பூங் சியாங்" என்று புரியாத சீன மொழியில் உரையாற்ற அவரையெல்லாம் உலகப் பிரசித்தி பெற்ற கேம்பிரிட்ஜ்ஜுக்குள் யார் விட்டார்கள் என்பது வேறு விஷயம்! அது போல, சமீபத்தில் சுவீடன் சென்ற இஸ்ரேலியத் தூதர் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியபோது, இரு "பாலஸ்தீனிய ஆதரவு" மாணவர்கள் அவர் மீது ஷூ வீசினர். அது அவர் வயிற்றில் பட்டு, அவருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன ;-)

இன்று, (சீக்கியர்களுக்கு எதிரான 1984-ஆம் ஆண்டு வன்முறைக்குக் காரணமாக உலகமே நம்பும்) ஜகதீஷ் டைட்லரை குற்றமற்றவர் என்று CBI கூறியிருப்பது குறித்து தனக்கு மகிழ்ச்சி என்று பேசிய ப.சிதம்பரத்தின் மீது கடுங்கோபம் கொண்ட ஜர்னைல் சிங் என்கிற சீக்கியப் பத்திரிகையாளர் ஒருவர், அவர் மீது செருப்பை வீசியிருக்கிறார்! ஜர்னைல் Line & Length மீது அக்கறையின்றி UNDERARM வீச்சைப் பயன்படுத்தியதால், வீச்சில் வேகமும் இல்லை, குறியும் தப்பி விட்டது என்றும், வீச்சிலிருந்து தப்பியதில் ப.சிதம்பரத்தின் லாவகத்திற்கு எந்தப் பங்கும் கிடையாது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இராக்கிய நிருபர் போல, ஜர்னைல் தனது 2வது ஷூவையும் பயன்படுத்தாமல் விட்டது தமிழகத்தில் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம் :)

ஜர்னைல் ஒரு ஷூ வீசியதற்கே, அவருக்கு அகாலிதளம் கட்சியின் இளைஞரணி ரூ.2 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. 4 லட்சம் பெறுவதற்கான வாய்ப்பை ஜர்னைல் இழந்து விட்டதி எண்ணி வருத்தமாக உள்ளது ;-) இனிமேல், பிரஸ் கூட்டங்களில் பத்திரிகையாளர்கள் வெறுங்காலோடு தான் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று சந்தேகிக்கிறேன்...

விக்கிபீடியாவில் ஷு டாஸிங் (Shoe tossing) என்பது குறித்து இங்கு வாசிக்கவும். வாசிக்க சுவாரசியமான தகவல்கள் உள்ளன.

பிற்சேர்க்கை: பத்ரி தனது இந்த இடுகையில் ஏதோ ஒன்றை (தங்கள் கோமணம், ஜட்டி உட்பட!) எரித்து (அல்லது கறுப்புக்கொடி காண்பித்து) தங்கள் கோபத்தை / எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்புவர்களுக்காக ஒரு குறிப்பிட்ட இடத்தை பிரத்யேகமாக ஒதுக்கி அதற்கு அனுமதி அளித்து விடலாம் என்ற வகையில் ஒரு கருத்தைச் சொல்லியிருந்தார்.

அதன் எக்ஸ்டென்ஷனாக, இது போல ஷூ எறிபவர்களுக்கும் தனியான விசாலமான இடத்தை ஒதுக்கி விட்டதால் நல்லது. யாருக்கும் அடிபடும் அபாயமில்லை. அவர்களும் ஃபிரிஸ்பி போல செருப்பை வீசி விளையாடலாம். நல்ல உடற்பயிற்சி! தூக்கி எறிந்த செருப்பை திரும்ப எடுத்து வந்து தர நாய்களையும் கூட்டிச் சென்றால் நல்லது!

எ.அ.பாலா

Sunday, April 05, 2009

537. கி அ அ அனானியின் அமர்க்களமான அரசியல் தீர்க்க தரிசனம்!

சென்ற ( 2008 ) செப்டம்பர் மாதம் கி அ அ அனானி ஒரு மேட்டர் எழுதி அனுப்பி , அதை பதிவாக இட்டிருந்தேன்

இந்த முறை ஏன் விஜயகாந்தாக இருக்கக்கூடாது

எதேச்சையாக மீண்டும் அதைப் படித்துப் பார்த்த போது அவரது அரசியல் தீர்க்க தரிசனம் பிரமிக்க வைத்தது :)
மேற்க்கூறிய பதிவிலிருந்து கி அ அ அனானியின் தொலை நோக்குப் பார்வை சார்ந்த கருத்துக்களை கீழே தந்திருக்கிறேன்

1 ) உதாரணமாக வரும் தேர்தலில் பமக திமுக உறவு என்பது நடவாத ஒரு விஷயம் .


2 ) அதே போல திமுகவும் காங்கிரஸுடனான தங்களது உறவுக்காக கம்யூனிஸ்டுகளை உதறத் தயாராகி விட்டனர்.

3 ) கம்யூனிஸ்டுகளைப் பொறுத்த வரை இந்தத் தேர்தலில் அவர்களுக்கு பெரியதாக எந்த சாய்ஸும் இல்லை. பாஜக இல்லாத அதிமுக கூட்டணி அல்லது ஒரு மூன்றாவது கூட்டணி என்பதில் இரண்டில் ஒன்றுதான் இவர்களது முடிவாக இருக்கமுடியும்

4 ) அதிமுகவைப் பொறுத்தவரை கம்யூனிஸ்டுகளா / பாஜகவா என்று வரும் போது அவர்கள் கம்யூனிஸ்டுகளைத்தான் தேர்ந்தெடுப்பர்.அதில்தான் அவர்களுக்கு ஆதாயம்.

5 ) மற்ற கட்சிகளைக் கணக்கில் கொண்டால் வைகோ அனேகமாக இந்த பாராளுமன்றத் தேர்தல் வரை அதிமுகா கூட்டணியில்தான் இருப்பார்

6 ) பமகவைப் பொறுத்த மட்டில் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற தற்கொலை முடிவைத் தவிர அவர்களிடம் உள்ள ஒரே சாய்ஸ் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதுதான்.

தமிழ் வலைப்பதிவுகளில் பாராளுமன்றத் தேர்தலில் தமிழக கட்சிக் கூட்டணி குறித்து இவ்வளவு தெளிவாக யாரும் எழுதி நான் வாசித்ததாக ஞாபகமில்லை. அதனால்தான் சொல்கிறேன் வலையுலகின் தமிழக அரசியல் விமர்சன பிரும்மாக்களையெல்லாம் ஒரு அனானி சர்வசாதாரணமாகத் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார்.

அவரது தனித்திறமையை முன்னமே அறிந்ததால்தான் அவரது பதிவுகளை எனது வலைப்பதிவில் தொடர்ந்து பதிப்பித்து வருகிறேன் :)

பாலா

Thursday, April 02, 2009

536. சுகுணா திவாகருக்கு ஒரு இலவச விளம்பரம்!

சமீபத்தில் சுகுணா திவாகர் எழுதிய இடுகையின் சுட்டியை டோண்டு ராகவன் எனது இந்தப் பதிவில் பின்னூட்டத்தில் இட்டுச் சென்றிருந்தார். அதை வாசித்தபோது தான் தெரிந்தது, சுகுணா திவாகர் எனக்கு "திடீர் ஈழ ஆதரவாளர்" பட்டம் வழங்கியிருப்பது! சுகுணா போன்ற ஜனநாயகவாதிகளுக்கு விளக்கம் அளிப்பது என் கடமையாகிறது :)

சுகுணா திவாகர் எழுதியது:

ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் ஜனநாயகச்சக்திகளின் மீது அவதூறுகளைப் பரப்பும் கும்பல்களிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது அவசியம். அருந்ததிராய் ஈழத்தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்கிற ரேஞ்சில் என்றென்றும் அன்புடன் பாலா எழுதுவது அதற்கு ஒரு உதாரணம். அருந்ததிராய் முன்வைத்துப் போராடிய எத்தனை மக்கள் பிரச்சினைகளை பாலா ஆதரித்திருக்கிறார்? சனாதனப் பார்வையையே தன் எழுத்துக்களின் அடிப்படையாய்க் கொன்டுள்ள பாலா போன்றவர்கள், அருந்ததிராய் பப்ளிசிட்டிக்காக மட்டுமே பேசுவார் என்று அருந்ததிராயின் வகிபாத்திரத்தை ஊத்தி மூடப்பார்ப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இதேபோலவே புலிகளின் மீதான விமர்சனத்தோடேயே ஈழமக்களின் பிரச்சினைகளைப் பேசும் சுகன், ஷோபாசக்தி, .மார்க்ஸ், ரயாகரன் என மாற்றுக்குரலை முன்வைக்கும் அனைவரையும் ரா ஆட்கள், கருணா ஆதரவாளர்கள், இலங்கை அரசை மறைமுகமாக ஆதரிப்பவர்கள் என்றெல்லாம் அவதூறு பரப்புவது, அவர்கள் முன்வைக்கும் கருத்துக்களின் நியாயங்களைக் கூட பரிசீலிக்க மூர்க்கமாய் மறுப்பது ஆகியவை இன்று இணையத்தில் தீவிரமாகப் பரவி வருகிறது. இன்னும் சொல்லப்போனால் ஈழப்பிரச்சினையை அரசியல் ஆதாயமாக மாற்றி அதற்குத் துரோகம் செய்துள்ள நெடுமாறன் உள்ளிட்ட கருங்காலிகளை விமர்சிப்பதை விட மேற்கண்ட ஜனநாயகச் சக்திகளைக் காய்வதே அதிகமாய் நடக்கிறது. துரோகி பட்டம்தான் நமக்கு வாரி வழங்குவதற்கு ஏகப்பட்ட கையிருப்பு உள்ளதே! உலகமயமாக்கல், இந்துத்துவ வன்முறைகள், தலித்துகளின் மீதான வன்கொடுமைகள், சமீபகாலமாய் பெண்களின் மீது அதிகரித்து வரும் கலாச்சாரப் பாசிஸ்ட்களின் தாக்குதல்கள் ஆகியவற்றிற்கெதிராகத் தொடர்ச்சியாகப் போராடி வருபவர்களே ஈழப்பிரச்சினை குறித்தும் விமர்சனபூர்வமான போராட்டங்களில் பற்றி உறுதியாய் நிற்கின்றனர். வைகோ மாதிரியான அரசியல் வியாபாரிகளும் திடீர் ஈழ ஆதரவாளர்களும் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஈழமக்களைக் கைகழுவி விடும் நிலை கொண்டவர்களே என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

..பாலா கருத்து:

//அருந்ததிராய் ஈழத்தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்கிற ரேஞ்சில் என்றென்றும் அன்புடன் பாலா எழுதுவது
//
இவ்வளவு நாட்கள் வாயை மூடிக் கொண்டிருந்து விட்டு, இப்போது ஏதோ கட்டாயத்தால் ஈழத்தமிழர் ஆதரவாக களத்தில் குதித்துள்ள அருந்ததியை விமர்சிக்க (எப்படி சுகுணா திவாகருக்கு அருந்ததி சார்பாக ஜால்ரா அடிக்க உரிமை இருக்கிறதோ!) எனக்கும் பூரண உரிமை இருக்கிறதாகவே நினைக்கிறேன்.

மேலும், அருந்ததி ராயை ஸ்ரீலங்கா சென்று போராடவா சொல்கிறேன்!!! இத்தனை நாட்கள் வாயை மூடிக் கொண்டு இருந்து விட்டு இப்போது கூவ வேண்டிய அவசியம் என்ன என்று கேட்பதில் என்ன தவறு ? அதுவும், ரோசா வசந்த் தனது கமெண்ட்டில் "I heard (though I am not sure) when the Tamil literary writers approached Arundhati to make a statement on Srilankan issue, she refused saying `please don't disturb'." -- இப்படி சொல்லியிருந்ததும், நான் கேள்வி கேட்டதற்கு ஒரு காரணம்!

//அருந்ததிராய் முன்வைத்துப் போராடிய எத்தனை மக்கள் பிரச்சினைகளை பாலா ஆதரித்திருக்கிறார்?
//
நான் எதைப் பற்றி எப்போது பேச வேண்டும் என்பதை நான் தீர்மானிக்கிறேன். தொழில், குடும்பம் என்ற காரணங்களும் இருக்கிறது. அது சரி, சுகுணா அனைத்துப் பிரச்சினைகளிலும் தன் தரப்பு பற்றி எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா ? சமீபத்தில் எக்மோரில் ஒரு அபார்ட்மெண்ட் குடியிருப்பில், பெண்கள் மீது நிகழ்ந்த வன்முறையை கண்டித்து நான் எழுதியிருந்தேன். சுகுணா ஏன் அது பற்றி எழுதவில்லை என்று முட்டாள்தனமாக கேட்க முடியுமா? பலவற்றை வாசிக்கிறோம், பார்க்கிறோம், முடிந்தபோது எழுதுகிறோம், அஷ்டே.

//சனாதனப் பார்வையையே தன் எழுத்துக்களின் அடிப்படையாய்க் கொன்டுள்ள பாலா போன்றவர்கள்
//
அது என்ன எழவு சனாதனப் பார்வை என்று விளக்கினால் தன்யனாவேன். கிருமி லேயருக்கு எதிராக எழுதியதை சனாதனப் பார்வை என்று சொன்னால், பேச எதுவுமில்லை. எனக்குத் தெரிந்த சனாதன தர்மம்
"பிரக்ஞானம் பிரம்மா , அஹம் பிரம்மாஸ்மி , தத்வம் அஸி , அயம் ஆத்மா" !!!

//வைகோ மாதிரியான அரசியல் வியாபாரிகளும் திடீர் ஈழ ஆதரவாளர்களும்
//
ஈழத்தமிழர் அவலம் பற்றி பேசும்போது கூட எப்படி அரசியல் பல்லிளிக்கிறது பாருங்கள்! வைகோ அரசியல் வியாபாரியாம், ஆனால் சுகுணாவுக்குப் பிடித்த அரசியல்வாதியை / கட்சியை விமர்சித்து ஒரு வார்த்தை கிடையாது, கொடுமைடா சாமி :(

//அருந்ததிராயின் வகிபாத்திரத்தை ஊத்தி மூடப்பார்ப்பதில் "நாம்" கவனமாக இருக்க வேண்டும்.
ஈழமக்களைக் கைகழுவி விடும் நிலை கொண்டவர்களே என்பதையும் "நாம்" புரிந்துகொள்ள வேண்டும்.
//
"நாம்" என்று சொல்லும் தொனியில் உள்ள கர்வத்தை கவனிக்கவும்! அதாவது "ஈழமக்களுக்கு ஆதரவு அளிப்பதில் "நாம்" தனித்துவமானவர்கள். தனது ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து எந்த நேரமும் மிக எளிதில் பல்டி அடித்து விடக்கூடிய ..பாலா போன்ற "திடீர்" ஆதரவாளர்களிடம் "நம்மை"ப் போன்ற "அக்மார்க்" ஆதரவாளர்கள் மிக உஷாராக இருக்க வேண்டும்!" என்பதை எவ்வளவு நேர்த்தியா எடுத்துச் சொல்கிறார், பாருங்கள்!

பெரியார் பாசறையிலிருந்து வந்ததாலும், கம்யூனிச சித்தாந்தத்தில் ஊறியதாலும், தனக்கும் (தன் நண்பர்களுக்கும்!!) மட்டுமே நலிந்தோரைப் (ஈழத்தில் அல்லலுறும் தமிழர் என்று வாசிக்கவும்!) பற்றிப் பேச தகுதியும் அருகதையும் இருப்பதாக ஒருவர் எண்ணினால் அவரைப் பார்த்து பரிதாபப்படுவதை விடுத்து வேறென்ன செய்ய ? இப்படிப்பட்ட அங்கீகாரம் (யார் இதை வழங்குகிறார்கள்? வழங்குபவரின் தகுதிகள் யாவை?) கிடைத்து விட்டதாக சுகுணா எப்படி எண்ணுகிறார்? இன்னொருவரின் ஈழத்தமிழர் ஆதரவை கொச்சைப்படுத்தி, தனக்கு அங்கீகாரம் தேடும் அவலம் குறித்து என்னத்தைச் சொல்ல ?

மேலும் சில பாயிண்டுகள்:

"This is to certify that anbudan BALA is a bonafide supporter of Ealam Tamils" என்று சுகுணா திவாகர் கையெழுத்திட்ட நற்சான்றிதழ் இருந்தால் மட்டுமே, நான் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து எழுதும் தகுதி பெறுகிறேனா ? இல்லையெனில் நான் போலியா ? .கொ..சு :-(

ஈழத்தமிழர் பால் எனது அக்கறை உண்மையா/போலியா என்பதை, இணையத்தில் நான் எழுதியுள்ளதை வைத்து, வாசிப்பவர்கள் தீர்மானிக்கட்டும். ஒரு பிரச்சினையுமில்லை! இது போல தன்னிலை விளக்கம் தருவது சற்று கேவலமாக இருந்தாலும், இதன் மூலன் சுகுணா திவாகருக்கு ஏதாவது புரியும் என்ற நம்பிக்கை இல்லாவிட்டாலும், சுகுணாவைத் தவிர, என் வலைப்பதிவை வாசிக்கும் இன்னும் சிலருக்காக (கவனிக்கவும், "பலர்" என்று கூறவில்லை!) இந்த விளக்கத்தை எழுத வேண்டியுள்ளது!

சென்னையில் நடந்த அமைதிப் பேரணி

எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails